தமிழ்நாடு
இன்னும் 3 மாதங்களில் திமுக அரசு…. பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!
இன்னும் மூன்று மாதங்களில் மத்திய அரசின் கொள்கைகளை முழுமையாக திமுக அரசு புரிந்து கொள்ளும் என பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 10 ஆண்டுகாலம் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மத்திய அரசின் செயல்பாடுகளை கண்மூடித்தனமாக எதிர்த்து வந்தனர். ஆனால் இன்று ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசின் திட்டங்களை புரிந்து கொண்டு அவற்றுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
தமிழகத்திற்கு ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வந்தபோது ’கோ பேக் மோடி’ என்று டிரெண்ட் செய்த திமுகவினர் இன்று அதே திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 2000 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு இருப்பதாக கூறி வருகின்றனர்.
தமிழகத்திற்கு சரியான அளவில் தடுப்பூசி ஒதுக்கவில்லை என எனவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாகவும் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுகவினர் விமர்சித்தனர். ஆனால் இன்று அதே திமுகவினர் தேவைக்கு அதிகமாக தமிழகத்திற்கு மத்திய அரசு தடுப்பூசியை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல் வேளாண்மை சட்டங்களையும், நீட் தேர்வு குறித்த விஷயங்களையும் திமுகவினர் இன்னும் மூன்று மாதத்தில் புரிந்து கொண்டு தங்களுடைய கொள்கையை மாற்றிக் கொள்வார்கள் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
இன்னும் மூன்று மாதத்தில் மத்திய அரசின் கொள்கைகளை திமுக அரசு ஆதரிக்கும் என நம்பும் அண்ணாமலையின் நம்பிக்கை பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.