தமிழ்நாடு
தமிழக அரசுக்கு நல்ல ஞானத்தை கொடு: தஞ்சை பிரகதீஸ்வரரிடம் மனு கொடுத்த இந்து முன்னணி!
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பிரகதீஸ்வரரிடம் தமிழக அரசுக்கு நல்ல ஞானத்தை கொடு என இந்து முன்னணியினர் கோரிக்கை மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு அனுமதி இல்லை என்றும் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் நிறுவ மற்றும் ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்க தடை என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்புக்கு இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்து முன்னணி மாநில செயலாளர் முருகானந்தம் இன்று தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர், நந்தி மற்றும் தாயார் ஆகியோர்களிடம் அர்ச்சகர் மூலமாக மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசுக்கு வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழாவை நடத்த அனுமதிக்கும் அளவுக்கு நல்ல ஞானத்தை கொடு என்றும் இந்த விழாவினை சிறப்பாக நடத்த தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்கும் அளவுக்கு அருள்புரிய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த மனு தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தி, மூலவர் பிரகதீஸ்வரர், தாயார் பெரியநாயகி அம்மன் ஆகியோர்கள் முன்வைத்து மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை பெரிய கோவிலில் கோரிக்கை மனு கொடுத்து வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுவை கொடுத்துள்ளதாக இந்து முன்னணி மாநில செயலாளர் முருகானந்தம் உள்பட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்துக்களை பழிவாங்கும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் சமூக இடைவெளியுடன் விநாயகர் வழிபாடு நடத்த, ஊர்வலம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.