சினிமா செய்திகள்
ஓடிடியில் ரிலீஸ் செய்தால்? தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த செக்!
ஓடிடியில் ரிலீஸ் செய்யும் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவு எடுத்து உள்ள தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர்கள் தற்போது திரையரங்குகள், ஓடிடி மற்றும் சாட்டிலைட் என பல்வேறு விதங்களில் வருமானம் பார்த்து வருகின்றனர். ஒரு சில தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் ரிலீசான திரைப்படங்களை 10 அல்லது 15 நாட்களிலேயே ஓடிடியில் ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துள்ளனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளது. இதன்படி ஓடிடியில் நேரடியாக ரிலீசான திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் திரையிடுவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையரங்குகளில் ரிலீசாகி 4 வாரங்கள் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளும் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்களுக்கு பிரிமியர் காட்சிகளுக்கு திரையரங்குகள் வழங்கப்படமாட்டாது என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ’தலைவி’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி 15 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கியதை அடுத்து அதிரடியாக ஒரு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.