தமிழ்நாடு
நாளை முதல் தினமும் 200 வார்டுகளில் தடுப்பூசி மையம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
நாளை முதல் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தினமும் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் ஒதுக்கப்பட்டுள்ள 79 லட்சம் தடுப்பூசிக்கும் அதிகமாக கூடுதலாக 23 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி செப்டம்பர் மாதத்திற்கு தமிழகத்தில் 1.04 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நாளை முதல் தினமும் 200 கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சென்னையில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் எந்தெந்த பகுதியில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை மாநகராட்சியின் http://covid19chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_center என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் 200 வார்டுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் இணையதளம் வாயிலாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்துகொள்ள மாநகராட்சியின் gccvaccine.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தினந்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நாளைமுதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது அடுத்து சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளி வளாகங்களில் தடுப்பூசி மையங்கள் செயல்படும் என்றும் அங்கு ஆசிரியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரிகளும் நாளை முதல் திறக்கப்பட்டுள்ளதால் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.