தமிழ்நாடு
எல்லையோர மாவட்டங்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள்: முதலமைச்சருக்கு பரிந்துரை!
எல்லையோர மாவட்டங்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என்றும் மற்ற மாவட்டங்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் அதேபோல் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்ய முக்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருப்பதால் கேரளா உள்பட மாநில எல்லையில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என்றும் மற்ற பகுதிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
எனவே கேரள மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சிலமணி நேரங்களில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.