பிற விளையாட்டுகள்
இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள்: பாரா ஒலிம்பிக்கில் பதக்க மழை!
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளதை அடுத்து இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்க மழையை பொழிந்து வருகின்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சற்று முன்னர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா தங்க பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இதனை அடுத்து தற்போது வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் யோகேஷ் கதுன்யா வெள்ளி பதக்கம் வென்று சாதனை செய்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 44.38 மீட்டர் தூரம் வட்டு எறிந்ததை அடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா என்பவர் வெள்ளிப்பதக்கத்தையும், சுந்தர்சிங் குர்ஜார் என்பவர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று அசத்தி உள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதனை அடுத்து இந்தியாவுக்கு ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.