தமிழ்நாடு
பள்ளிகள் திறப்பது குறித்து மறுபரிசீலனையா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என எய்ம்ஸ் தலைவர் எச்சரித்து உள்ளதை அடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு உள்பட அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் இன்றி ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் பள்ளிகளில் திறந்தால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் எய்ம்ஸ் இயக்குனர் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்/ இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் முதல்வரின் இந்த ஆலோசனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.