சினிமா
புகாரை வாபஸ் பெற்ற ஷங்கர்… மீண்டும் களம் இறங்கும் வடிவேலு…..
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் வடிவேலு என்பதும் அவர் நடிக்காத படங்களில் இல்லை என்ற அளவில் சில ஆண்டுகள் திரையுலகம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வடிவேலு நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை இல்லை என்பதும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவருடைய வசனங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் திரையுலகில் தலைகாட்டாமல் உள்ளார். அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் காரணமாக வடிவேலுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, வடிவேலுவுக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. எனவே, அவர் வெப் சீரியஸில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சனையை லைக்கா நிறுவனத்திற்கு கை மாற்றிவிட்டார் ஷங்கர். அதன்படி, லைக்கா நிறுவனத்திற்கு வடிவேலு ஒரு புதிய படம் நடித்து கொடுக்கவுள்ளார். மேலும், வடிவேலு மீதான புகாரையும் ஷங்கர் வாபஸ் பெற்றுவிட்டார். எனவே, இனிமேல் சினிமாக்களில் வடிவேலு வழக்கம் போல் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான செய்தியை தயாரிப்பாளர் சங்கமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.