தமிழ்நாடு
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு 10 நாள் தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு தடை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தளர்வுகள் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டாலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாளை அதாவது ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் செந்தில் ராஜா அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் திருச்செந்தூர் பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
திருச்செந்தூர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும் நிலையில் இந்த நேரத்தில் அதிக மக்கள் கூடும் வாய்ப்பிருப்பதாகவும் இதனால் கொரோனா பரவும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா ஆகமவிதிப்படி பக்தர்கள் இன்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்