உலகம்
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற விமானம் கடத்தல்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்!
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட பெரும்பாலான பகுதிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது.
தலிபான்கள் பழமைவாதிகள். அவர்கள் பெண்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுப்பார்கள், இனி பாதுகாப்பு இருக்காது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கிவிட்டனர்.
அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டுவிடும். பின்னர் அங்குள்ள பல்வேறு நாட்டு மக்களுக்கு ஆபத்து என்பதால் அங்குள்ள மக்களை மீட்க உலக நாடுகள் விமானங்களை அனுப்பி வருகின்றன.
இந்திய அரசும் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானங்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட விமானம் ஈரான் சென்றுள்ளது. ஆனால் விமானத்தை கடத்தியது யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் விமானம் கடத்தப்பட்டதை உக்ரைன் நாட்டு துணை உள்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
சில நாட்கள் முன்பு இந்தியர்களை தலிபன்கள் கடத்தினர் என செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்கள் கடத்தப்படவில்லை. பாஸ்போர்ட் பரிசோதனை மட்டுமே செய்தார்கள் என்று பின்னர் செய்தி வந்தது.
கடத்தப்பட்ட விமானத்தில் 100-க்கு மேற்பட்ட பயணிகள் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. சரியாக எவ்வளவு பயணிகள் அந்த விமானத்தில் பயணித்தார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.
இதனால் தங்கள் நாட்டு மக்களை மீட்க விமானம் அனுப்பி வரும் நாடுகள், எங்கு தங்களது நாட்டு விமானமும் கடத்தப்படுமோ என அதிர்ச்சியில் உள்ளனர்.