தமிழ்நாடு
எடப்பாடி நடந்து போக வேண்டும்; ஹெலிகாப்டரில்தான் போய் பாப்பீங்களோ?: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து பார்வையிட சென்றார். அதுவும் ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் ஏற்பாடு செய்யப்பட்ட சிலரை சந்தித்து விட்டு தனது பயணத்தை முழுமையாக கூட முடிக்காமல் பாதியிலேயே திரும்பிவிட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனை அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில் அந்த கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தற்போது மேலும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனியார் தமிழ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி உண்மையிலேயே பெரிய மனுஷனாக இருந்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு காரில் போய் இறங்கி, கார் போக முடியாத இடத்திற்கு நடந்தே சென்றிருக்க வேண்டும். ஒரு நாள் முழுக்க நடந்து சென்றிருக்க வேண்டும். மக்களை சந்தித்து பேசியிருக்க வேண்டும். விவசாயிகளின் குறைகளை கேட்டிருக்க வேண்டும்.
எடப்பாடி நடந்து போக வேண்டும். என்ன பயமா? மக்களை சந்திக்க பயமா? வெதர் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லுகிறார். ஹெலிகாப்டரில்தான் போய் பாப்பீங்களோ? என கடுமையாக விமர்சித்தார் தங்க தமிழ்ச்செல்வன்.