தமிழ்நாடு
ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து!
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று திட்டமிட்டிருந்தார்.
இன்று காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட முக்கிய பிரபலங்கள் இந்த ஆலோசனையில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டிருந்தது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் இந்த கூட்டம் நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருடன் ஆலோசனை செய்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
குறிப்பாக பள்ளிகள் திறப்பது மற்றும் திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு நாளைய அறிவிப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.