தமிழ்நாடு
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு: என்ன காரணம்?
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 121617 என்றும் ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத எழுத விண்ணப்பித்த மாணவ மாணவிகள் எண்ணிக்கை 112890 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 9 ஆயிரம் பேர் இந்த ஆண்டு குறைவாக நீட் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு தமிழக அரசின் குழப்ப நிலையே காரணம் என்று கூறப்படுகிறது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நீக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தது. அந்த வகையில் திமுக ஆட்சி ஏற்பட்டதை அடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகவில்லை என்றும் ஆனால் கடைசி நேரத்தில் திடீரென நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எப்படியாவது விலக்கு கிடைத்துவிடும் என்ற காரணத்தினால்தான் பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1614714 என்றும் இதில் சுமார் 9 லட்சம் பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.