உலகம்
தாலிபான்கள் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்: அனைத்து பதிவுகளும் நீக்கம் என தகவல்!
தாலிபான்களின் முகநூல் கணக்குகள் அனைத்தும் முடக்கபட்டதாகவும் அந்தக் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளும் நீக்கம் செய்யப் பட்டதாகவும் பேஸ்புக்கில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே நடந்த போரில் தாலிபான்கள் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றி உள்ளனர். இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் அஸ்ரப் கானி நாட்டை விட்டே ஓடிவிட்டார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் வேலைக்கு வர அச்சப்படுகிறார்கள் என்பதும் துணை அதிபர் உள்பட பெரும்பாலான அதிபர்கள் நாட்டை விட்டு ஓடி விட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக அந்நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர். இதனால் நாட்டின் விமான நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தாலிபான்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்வதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் திடீரென ஃபேஸ்புக் நிறுவனம் இதுகுறித்து அதிரடி முடிவு எடுத்துள்ளது.
தாலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் என அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே தாலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கணக்கில் உள்ள பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.