உலகம்
அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு: உடனே பணிக்கு திரும்ப உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் இதனை அடுத்து அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென்று தாலிபான்கள் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் தாலிபான்கள் அதிகாரபூர்வமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு ஊழியர்கள் முன்னாள் அதிபருக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்பதும் இந்த நடவடிக்கைகள் தாலிபான்களுக்கு எதிராக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது உள்ள நிலையில் அரசு ஊழியர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாகவும் உடனடியாக அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தாலிபான்கள் செய்திப்பிரிவு உத்தரவிட்டிருக்கிறது.
இருப்பினும் ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்கள் பணிக்கு மீண்டும் திரும்புவார்களா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபரே நாட்டை விட்டு தப்பித்து ஓடி விட்ட நிலையில் அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அச்சப்பட்டு வருகிறார்கள் என்றும் பல அரசு ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் தாலிபான்கள் தரப்பிலிருந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.