தமிழ்நாடு
சீர்காழியை தாக்குமா அடுத்த புயல்?: உஷார் நிலையில் அரசு!
![Cyclone 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Cyclone-1-2.jpg)
நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் சரியாகவில்லை. புயலால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் ஆறவில்லை. அதற்குள் அடுத்த புயல் ஒன்று தாக்க வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இயல்பு வாழ்க்கையை இழந்து நிற்கும் மக்கள் இதனால் மீண்டும் அச்சத்தில் உள்ளனர்.
கஜா புயலின் கோர தாண்டவத்தால் மக்கள் மீள்வதற்குள் அடுத்ததாக நாளை பெத்தாய் என்ற புதிய புயல் ஒன்று சீர்காழி அருகே உள்ள பழையாறு, திருமுல்லைவாசல், பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் வழியாக கரையை கடக்கும் என்ற தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரிடர் சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி, கடலூர் மாவட்டத்தில் அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் 2 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர், அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் சேகரித்து வைத்துக்கொண்டால் மழையை எதிர்கொள்ளலாம் என்றார். கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒலி பெருக்கி விளம்பரம் மூலம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.