உலகம்
சோதனை மேல் சோதனை: ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது.
கடந்த சில வருடங்களாக ஆப்கன் அரசுக்கும், தாலிபான் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போர் மூண்டது. இந்த போரில் தாலிபான்கள் முன்னேறி வந்த நிலையில் நேற்று தலைநகர் காபூலை பிடித்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் நாடு முழுவதுமே தாலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆப்கன் அதிபர் மற்றும் துணை அதிபர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் தாலிபான்கள் பயமுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பேருந்து ரயில் நிலையத்தில் இருக்கும் கூட்டம் போல விமான நிலையத்தில் மிக அதிக அளவு கூட்டம் இருப்பதால் தற்காலிகமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் தாலிபான்கள் நாட்டை பிடித்ததால் கடும் அதிர்ச்சி உள்ள நிலையில் சோதனை மேல் சோதனையாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தானில் ஃபேசாபாத்திலிருந்து தென்கிழக்கு 83 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான்கள் வசமாகியுள்ள ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.