உலகம்
தலைமறைவானார் ஆப்கன் அதிபர்: போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை விலக்கப்பட்டதில் இருந்தே தாலிபான்கள் கை ஓங்கிவந்த நிலையில் தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட முக்கிய நகரங்களை பிடித்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையை தனது கட்டுப்பாட்டுக்குள் தாலிபான்கள் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாகவும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் வந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆப்கன் நாட்டை குறிப்பாக காபூல் நகரை ரத்தக்களறி ஆக்க விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார். அவர் தற்போது தஜகிஸ்தான் என்ற நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆப்கன் அதிபர் தனது இருப்பிடத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆப்கன் நாட்டில் போர் முடிவுக்கு வந்து விட்டதாக தாலிபான்கள் அறிவிப்பு செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் உள்பட பெரிய நகரங்களை எந்தவித எதிர்ப்புமின்றி தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதை எடுத்து விரைவில் தாலிபான்கள் ஆட்சி அங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கன் நாடு முழுவதுமே தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் ஐநா ஆலோசிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா உள்பட பல நாடுகள் தற்போது ஆப்கனில் தூதரகத்தை மூடிவிட்டதாகவும், ஆப்கனில் இருந்த 129 இந்தியர்கள் நேற்றிரவு பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.