தமிழ்நாடு
திமுக அரசின் வழக்குகளை எதிர்கொள்ள 6 பேர் கொண்ட ‘சட்ட ஆலோசனை குழு’: அதிமுக அதிரடி
திமுக ஆட்சி தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் களின் மீதான வழக்குகள் பாய தொடங்கி விட்டன ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர் வேலுமணி ஆகியோர்களின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில் மேலும் சில பிரபலங்களின் வீடுகளில் ரெய்டு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிஜிபி கந்தசாமி அவர்கள் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவும் தயாராகி வருகிறது திமுக அரசு தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்வதற்காக அதிமுக தரப்பில் இருந்து 6 பேர் கொண்ட சட்ட ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் குழுவில் ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், சிவி சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை மற்றும் பாபு முருகவேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீது, ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்குகள் புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கழகப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும், அல்லும் பகலும் அயராது ஈடுபட்டு வரும் கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுக-வினரின் தூண்டுதலால் கழகத்தினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில், கழகத்தின் சார்பில் “கழக சட்ட ஆலோசனைக் குழு” கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.
ஜெயகுமார், தளவாய் சுந்தரம், சிவி சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை மற்றும் பாபு முருகவேல் ஆகியோர்கள் சட்ட ஆலோசனை குழுவில் இருப்பார்கள். நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது அத்தகையவர்களுக்கு கழக சட்ட ஆலோசனைக்குழு இந்த வழக்குகளுக்கு அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும் எனவே கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட குழுவினரை தொடர்பு கொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.