இந்தியா
சிறுமிக்கு செலுத்தப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி: மீண்டு வர நெட்டிசன்கள் வாழ்த்து!
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மித்ராவுக்கு ரூபாய் 16 கோடி மதிப்பிலான ஊசிமருந்து சற்றுமுன் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் – பிரியதர்ஷினி தம்பதியினர் குழந்தை மித்ரா. இவருக்கு பிறப்பிலேயே அரியவகை நோயான முதுகு தண்டுவட சிதைவு நோய் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த சிறுமி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த குழந்தைக்கு ரூபாய் 16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த குழந்தையின் பெற்றோர்கள் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டினர். சமூக வலைதளங்களின் மூலம் திரட்டப்பட்ட நிதிகள் மற்றும் அரசு கொடுத்த சலுகைகள் ஆகியவற்றின் காரணமாக இந்த ஊசி சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
இதனையடுத்து ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி சற்றுமுன் சிறுமி மித்ராவுக்கு செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் நிதி திரட்ட வேண்டும் என்பதற்காகவும் திரையுலகினர் பலர் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்எம்ஏ எனப்படும் முதுகு தண்டுவட சிதைவு நோய் விரைவிலேயே குழந்தைக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தசைகள் பலவீனமாக இருக்கும். இதனால் நடப்பது ஓடுவது போன்ற இயல்பான செயல்களை அந்த குழந்தையால் செய்ய முடியாது. இந்த கொடிய நோய்க்கு மருந்துகள் இந்தியாவில் இல்லை என்பதை அடுத்து சுவிட்சர்லாந்தில் இருந்து தான் ரூ.16 கோடி செலவு செய்து இறக்குமதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.