தமிழ்நாடு
தீவிரமாகும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் கொட்டப்போகும் மழை!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்திலும், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த வார இறுதி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து இருப்பதன் காரணமாக ஏற்கனவே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சிவகங்கையில் நேற்று கனமழை பெய்தத்தை அடுத்து வெள்ள நீர் கரைபுரண்டு ஓடிய தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர், தென்காசி மற்றும் உள் மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை பகுதியில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் வரும் 10ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.