தமிழ்நாடு
விஷாலுக்கு நல்லதல்ல: எச்சரிக்கும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு!
அதிமுகவுக்கு ஆதரவாக புதிய செய்தி சேனலை நியூஸ் ஜெ என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் தொடங்கியுள்ளனர். இந்த சேனலின் ஒளிபரப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக நடிகர் விஷால் டுவிட்டரில் பதிவிட்டார். இதற்கு தற்போது அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
விஷால் தனது டுவிட்டரில், மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச் சம்பளம் வாங்கும் எம்எல்ஏ, எம்பிக்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இது புதிய நியூஸ் சேனலை தொடங்கியுள்ள அதிமுகவை சாடும் மறைமுகமாகவே விதமாகவே உள்ளது.
இந்நிலையில் கோவில்பட்டியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, எந்த அடிப்படையும் தெரியாமல் நடிகர் விஷால் பேசி வருகிறார். தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் கூட வழிமுறைகள் தெரியாமல் ஆர்.கே.நகரில் பெற்ற அனுபவத்தை மறந்து பேசுகிறார். இது விஷாலுக்கு நல்லதல்ல என்று எச்சரித்தார்.