இந்தியா
ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிமையான வழி, ஆதார் ஆணையம் அதிரடி!
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆதார் கார்டு வைத்துள்ளவர்களுக்கு உதவத் தாங்கள் வசிக்கும் இடத்திற்கான சரியான ஆவணங்கள் இல்லை என்றாலும் இரகசிய பின் எண் மூலம் முகவரியை எளிமையாக மாற்றும் நடைமுறையினை அறிமுகம் செய்ய உள்ளது.
2019 ஏப்ரல் 1 முதல் இந்தச் சேவை நடைமுறைக்கு வரும் என்றும் ஆதார் கார்டு வைத்துள்ளவர்கள் முகவரி மாற்றுக் கோரிக்கை வைக்கும் போது அவர்கள் அளித்தல்ல முகவரிக்கு இரகசிய பின் எண் ஒன்று தபால் மூலம் அனுப்பப்படும்.
அந்த இரகசிய பின் எண்ணை உள்ளிட்டு எளிமையாக ஆதாரின் எஸ்எஸ்யூபி இணையதளத்தில் முகவரியை மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
வாடகை வீட்டில் குடியுள்ளவர்கள் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர் செல்பவர்களுக்கு இந்த முகவரி மாற்றும் சேவை மிகுந்த பயன் அளிக்கும்.
மேலும் இந்தச் சேவைக்கான சோதனை முறை 2019 ஜனவரி 1 முதல் துவங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.
தற்போது ஆதார் கார்டு பயனர்கள் முகவரியை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான படிவத்தினைப் பூர்த்திச் செய்து பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற முகவரி சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.