இந்தியா
இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடிய ஒரு பிரிவினர்: காரணம் இதுதான்!
![vandana - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/vandana.png)
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் நேற்று மோதிய நிலையில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பிரிவினர் இந்தியாவின் தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையிலான மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இதனை அடுத்து இந்தியாவே சோகத்தில் மூழ்கிய நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உயர்ஜாதி வகுப்பினர் சிலர் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற வீராங்கனை வந்தனா கட்டாரிய இல்லம் அருகே சென்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடி ஆட்டம் போட்டதாக கூறப்படுகிறது.
இந்திய அணியில் தலித்துக்கள் இருந்ததால்தான் இந்தியா தோல்வியடைந்தது என்றும் அவர்கள் அருவருப்பாக கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரிகள் வெளியில் இருந்து வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்தியாவுக்குள்ளேயே பலர் இருக்கின்றனர் என்றும் அவர்களை முதலில் களையெடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் மிகக் காட்டமாக இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.