தமிழ்நாடு
கொரோனா பரவல்: தமிழக வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடை!
கொரோனா பரவல் எதிரொலியா தமிழ்நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திடீரென கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், தலைநகர் சென்னையில் முக்கிய வணிக வளாகங்கள் மூடப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாக்காலம் என்பதால் கோயில்கள், தேவாலயங்கள் உட்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு திடீரென விதிக்கப்பட்ட உத்தரவு இன்று முதல் வழிபாட்டுத் தலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஆடிப்பெருக்கு என்பதால் பக்தர்கள் அதிகப்படியாக விடியற்காலையிலேயே கோயில்களில் தரிசனத்துக்காகக் கூடத் தொடங்கினர். ஆனால், கோயில்களில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதேபோல், கோயில் படித்துறைகளிலும் பக்தர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொரோனா பரவலின் காரணமாகவே வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி வரையில் இந்தத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.