தமிழ்நாடு
ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
![online rummy - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/online-rummy.jpg)
ஆன்லைன் விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு குறித்த வழக்கில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்வதாகவும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை ரத்து செய்ய புதிய சட்டம் தமிழக அரசு கொண்டு வந்தால் அதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி மூலம் தமிழக இளைஞர்கள் ஏராளமானோர் பணத்தை இழந்து அதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை தற்கொலை செய்து கொண்டனர். இதனால் விலைமதிப்பில்லாத பல உயிர்கள் பலியானதை அடுத்து தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது நீதிமன்றம் ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து என்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் புதிய சட்டம் இயற்றலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதால் தற்போதைய தமிழக அரசு இதுகுறித்து புதிய சட்டம் இயற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.