தமிழ்நாடு
தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்பட வாய்ப்பில்லை- எழுத்துப்பூர்வ விளக்கமளித்த ஒன்றிய அரசு!
தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்பட வாய்ப்பில்லை என ஒன்றிய அரசு சார்பில் உள்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு விரைவில் இரண்டாகப் பிரிக்கப்படலாம் என்றும் புதிதாக கொங்கு நாடு உருவாகும் என்றும் பாஜக-வினர் சிலர் பேசி வந்தனர். இதனால் கொங்கு நாடு சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. தமிழ்நாட்டைப் பிரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறதா என்பது குறித்த பேச்சுகள், விவாதங்கள் எல்லாம் எழத் தொடங்கின.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி-க்களான எஸ்.ராமலிங்கம், பாரிவேந்தர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு ஒன்றிய அரசின் சார்பில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாகவே விளக்க பதிலும் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், ஒன்றிய அரசின் பரிசீலனையில் தமிழ்நாடு பிரிவு குறித்தான எந்த விவகாரமும் இல்லை என்பதும் தமிழ்நாடு பிரிக்க வாய்ப்பு இல்லை என்பதும் தெளிவாகி உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நிலவும் கொங்கு நாடு சர்ச்சைக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.