வணிகம்
ஆகஸ்ட் 1 முதல் வங்கி சேவை கட்டணத்தில் புதிய மாற்றம்.. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிவிப்பு!
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வங்கி சேவை கட்டணத்தில் புதிய மாற்றத்தைச் செய்துள்ளது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அண்மையில் தங்களது வீடு தேடி வரும் வங்கி சேவை திட்டத்தின் கட்டணத்தை மாற்றி அறிவித்தது.
இதுவரை தபால் காரர்கள் உதவியுடன், வீடு தேடி வரும் வங்கி சேவையை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இலவசமாக வழங்கி வந்தது. ஆனால் இனி அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை வீட்டிலிருந்தே பெற அழைப்பு விடுத்தால், வாடிக்கையாளர்கள் 20 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த படியே இந்தியா பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிலிருந்து ரொக்கப் பணம் எடுக்க வேண்டும் அல்லது பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் 20 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.