தமிழ்நாடு
ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தியேட்டர்கள் திறக்க அனுமதியா?
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9 வரை நீடிப்பு என்றும் புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தியேட்டர்கள் மதுபார்கள் திறக்க தடை தொடர்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள் காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் தொற்றை கண்டறிதல் சிகிச்சை தடுப்பூசி ஆகிய பணிகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்வாதாரம் பாதிக்கப் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தவறாக பயன்படுத்தினால் பெரும் பாதிப்பு உண்டாகும் என்றும் மூன்றாவது அலையை தடுக்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து இந்த அறிவிப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாதது பலரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் கல்லூரிகள் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.