இந்தியா
சமோசாவால் உயிரிழப்பு: விலை உயர்த்தியதால் தீக்குளித்த பரிதாபம்
சமோசா விலையை உயர்த்தியதால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அனுப்பூர் என்ற நகரில் உள்ள கடை ஒன்றில் வழக்கமாக இளைஞர் ஒருவர் சமோசா சாப்பிட்டு வந்தார். 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சமோசா திடீரென சமையல் எண்ணெய் விலை மற்றும் சில பொருள்களின் உயர்வு காரணமாக ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது.
15 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக சமோசா விலை உயர்த்தப்பட்டதால் வழக்கமாக சாப்பிடும் இளைஞர் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து சமோசா கடைக்காரருடன் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனால் சமோசா கடைக்காரர் சமோசா விலையை குறைக்க முடியாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அந்த கடையின் முன்பாக திடீரென தீக்குளித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த இளைஞர் மீது உள்ள தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவருக்கு அதிக தீக்காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு சமோசா விலை ரூபாய் ஐந்து உயர்த்தப்பட்டதற்காக இளைஞர் ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.