தமிழ்நாடு
பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு தேதி: அண்ணா பல்கலை அறிவிப்பு!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே ஒரு சில தேர்வுகள் நடத்தப்பட்டு, மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கவும், தேர்வுகள் நடத்தவும் மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி தற்போது அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி மற்றும் செமஸ்டர் தேர்வுக்கான தேதியை அறிவித்து உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலைகழகத்தின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து வகுப்புகள் தொடங்குவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 18 முதல் நவம்பர் 30 வரை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.
அதேபோல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.