தமிழ்நாடு
‘என்றும் அவர்கள் தான் அதிமுகவின் தலைவர்கள்!’: ஈபிஎஸ் – ஓபிஎஸ்ஸுக்கு எதிராக செல்லூர் ராஜூ
அதிமுகவில் தற்போது அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, மீண்டும் கட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார். அவரை கட்சியிலிருந்து முழுவதுமாக ஓரங்கட்டும் நோக்கிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி சென்று, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் இன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வுமான செல்லூர் ராஜூ சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்து உள்ளார். அவர், ‘எங்க மதுரையில் எல்லாம் நீங்கள் பாருங்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்கள் தான் பேனர்களில், விளம்பரங்களில் பெரிதாக இருப்பார். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் அந்த பேனர்களில் நிச்சயம் இருக்கும்.
ஆனால், அவர்கள் படம் என்பது ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களை விட சற்று குறைந்த அளவில் தான் இருக்கும். இதற்கு காரணம் அதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் தான் நிரந்தரத் தலைவர்கள். இதில் எந்த மாற்றுக் கருத்தும் எங்களுக்குள் இல்லை’ என்று கூறியுள்ளார்.