தமிழ்நாடு
டெல்லியில் முகாமிட்ட ஈபிஎஸ் – ஓபிஎஸ்; பாஜகவின் பிளான் என்ன?- அண்ணாமலை விளக்கம்
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து உள்ளனர்.
பாஜக மேலிடம் சொல்லித் தான் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் டெல்லி சென்று மத்திய முக்கியப் புள்ளிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரக்கப்படுகிறது.
குறிப்பாக சசிகலாவின் ரீ-என்ட்ரி குறித்து அதிமுகவுக்குத் தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே இந்த டெல்லி சந்திப்பை பாஜக தரப்பு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றி தன் கருத்தைத் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாக அதிமுக உள்ளது. அப்படி இருக்கையில் அதிமுகவின் தலைமை பிரதமர் மோடியைப் பார்ப்பதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அந்த அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. மற்றபடி அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜக என்றும் தலையிடாது’ என்று உறுதிபட கூறியுள்ளார்.