தமிழ்நாடு
சசிகலா பற்றிய கேள்வி- நைசாக நழுவிய எடப்பாடி!
![Edappadi Palanisamy - Sasikala - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Edappadi-Palanisamy-Sasikala.jpg)
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள்.
தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த சந்திப்பில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் பேசியுள்ளதாக தெரிகிறது.
சந்திப்பைத் தொடர்ந்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசி ஒதுக்கக் கோரியதாகவும், மேகதாது விவகாரத்தில் ஸ்திரமான முடிவை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திடீரென்று ஒரு நிருபர், ‘தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பினார். இன்னொருவர், ‘அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதா?’ என்றார். மேலும் ஒருவர், ‘சசிகலா குறித்து பிரதமருடனான சந்திப்பில் பேசப்பட்டதா?’ என்றார்.
அனைத்து கேள்விகளையும் கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பதில் சொல்லாமல் விறு விறுவென நடையைக் கட்டி நழுவி விட்டார்.