இந்தியா
வெள்ளி வென்ற மீராபாய்க்கு காவல் துறையில் உயர்பதவி: மணிப்பூர் அரசு முடிவு
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு அவர்களுக்கு மணிப்பூர் அரசு காவல் துறையில் முக்கிய பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது விறுவிறுப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது வரை மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு என்பவர் பெற்றுக்கொடுத்த வெள்ளிப் பதக்கம் மட்டுமே இந்தியாவுக்கான பதக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மீராபாய் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஊக்கமருந்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ள காரணத்தினால் மீராபாய்க்கு தங்கம் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டோக்கியோ விமான நிலையத்தில் இருந்து இன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்த மீராபாய் சானுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி என்ற மீராபாய் காவல்துறையில் ஏஎஸ்பி பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருக்கும் அரசு வேலை அளிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.