தமிழ்நாடு
போலீஸிடம் யாஷிகா கொடுத்த வாக்குமூலம்: விபத்துக்கு காரணம் யார்?
நடிகை யாஷிகா மற்றும் அவரது தோழி பவானி மற்றும் ஆண் நண்பர்கள் மகாபலிபுரம் அருகே நேற்று கார் விபத்தில் சிக்கியதை அடுத்து யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் யாஷிகாவிடம் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காவல்துறையினர் வாக்குமூலம் வாங்கியதாகவும் அந்த வாக்குமூலத்தில் யாஷிகா தான் காரை ஓட்டியது உறுதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர் மது அருந்தவில்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த விபத்துக்குக் யாஷிகா மிக வேகமாக காரை ஓட்டி வந்ததே காரணம் என்றும் ஒரு கட்டத்தில் கார் தடுமாறி வலதுபுறம் திரும்பினால் சாலை தடுப்பில் மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் யாஷிகாவின் தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் காயத்துடன் உயிர் தப்பினார்கள் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் யாஷிகா மீது அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்த செய்தது என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் யாஷிகாவை அவரது நெருங்கிய தோழிகள் ஒருவரான ஐஸ்வர்யா தத்தா மருத்துவமனையில் சென்று பார்த்து வந்துள்ளார். யாஷிகா நலமாக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமாகி விடுவார் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.