தமிழ்நாடு
அறநிலையத்துறை கோயில்கள், தனியார் சொத்துக்கள் அல்ல: அமைச்சர் சேகர்பாபு
அறநிலையத் துறை கோவில் சொத்துக்கள் தனியார் சொத்துக்கள் அல்ல என்றும் அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து கோவில்களை இந்து அமைப்பின் அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை வசம் இருக்கும் அதனை மாற்ற வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக இந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களுடைய வழிபாட்டு தலங்களின் சொத்துக்களை அறக்கட்டளை அமைத்து நிர்வாகம் செய்வது போல் இந்துக்கள் உள்பட மற்ற அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களையும் அறக்கட்டளை மூலம் நிர்வாகிகள் நிர்வாகம் செய்ய உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து பேட்டியளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் ’அறநிலைத்துறை கோயில்கள் தனியார் சொத்துக்கள் அல்ல என்றும் அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அறநிலையத்துறையில் குறை இருந்தால் சுட்டிகாட்டுங்கள் என்றும், அவற்றை திருத்திக் கொள்கிறோம் என்றும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அறநிலைத்துறைகளை கலைக்க பாஜக தொடர்ந்த பொதுநல வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.