இந்தியா
சிறப்பாக பணிபுரிந்தால் பென்ஸ் கார் பரிசு: பிரபல நிறுவனம் அறிவிப்பு!
சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சிறப்பு பரிசுகளை அவ்வப்போது வழங்கி வரும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனம் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார் பரிசு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி கூறியபோது ’சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு எங்கள் நிறுவனம் ஏற்கனவே பரிசு வழங்கி உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 50 பேர்களுக்கு பென்ஸ் கார் வழங்கியுள்ளோம். அந்த நடைமுறை இடையில் சில ஆண்டுகள் நின்று போய் விட்டாலும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நிர்வாகக் குழுவின் அனுமதி கிடைத்த பின் நடைமுறைப்படுத்தப்படும். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களை திறன் மிகுந்தவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதிக கவனம் எடுத்து வருகிறோம். அந்த வகையில்தான் இந்த பென்ஸ் கார் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பணியாளர் ஒருவர் விலகினால் அவருக்கு பதிலாக இன்னொருவரை நியமனம் செய்வதற்கு 15 முதல் 20 சதவீதம் வரை செலவாகிறது. அதற்கு பதிலாக பணிபுரியும் ஊழியர்களை திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கான அறிவிப்புதான் இந்த அறிவிப்பு என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் யார் யாருக்கு பென்ஸ் கார் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.