தமிழ்நாடு
தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி அறிவிப்பா?
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பதும், அவர்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களைப் போல தனித்தேர்வு மாணவர்களுக்கு ஆல்பாஸ் செய்யப்பட மாட்டாது என்றும் அவர்களுக்கு தனியாக தேர்வு வைக்கப்படும் என்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு முன்கூட்டியே தேர்ச்சி என அறிவித்து முறையான மதிப்பெண்கள் வழங்க வேண்டும் பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்களை போல் தனித் தேர்வர்களுக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டால் தான் அவர்களும் கல்லூரியில் சேர வசதியாக இருக்கும் என்றும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கருதி அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வானதி சீனிவாசனின் இந்த கோரிக்கையை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.