கிரிக்கெட்
டி20 போட்டியை அடுத்து 200 பந்துகள் போட்டி: இங்கிலாந்தில் இன்று தொடக்கம்!
ஒரு போட்டிக்கு மொத்தம் 200 பந்துகள் என்ற புதுவித கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தில் தொடங்கவிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டது என்பதும் ஐந்து நாட்கள் அந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து கிரிக்கெட்டை விறுவிறுப்பாக்க ஒருநாள் போட்டி ஆரம்பமானது. இதில் முதலில் 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்த நிலையில் அதன் பின்னர் 50 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் ஒருநாள் போட்டியும் ஒரு கட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டதை அடுத்து 20 ஓவர்கள் போட்டியான டி20 அறிமுகமானது. இந்த போட்டியின் முடிவு ஒரு சில மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த போட்டியை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக ஒரு இன்னிங்சில் 100 பந்துகள் என 200 பந்துகள் என்ற புது வித கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்சில் 100 பந்துகளில் மட்டுமே விளையாட வேண்டும். ’தி ஹண்ட்ரெட்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது.
இதில் ஒரு ஒவர் என்பது 5 பந்துகள் மட்டுமே என்றும் அதிகபட்சமாக ஒரு பந்து வீச்சாளர் 4 ஓவர் என மொத்தம் 20 பந்துகள் மட்டுமே வீசலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் முதல் 25 பந்துகளில் பவர் பிளே என கருதப்படும். அதுமட்டுமின்றி பந்துவீச்சாளர்கள் நோபால் வீசினால் அதற்கு 2 ரன்கள் பெனால்டி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுவிதமான போட்டி கிரிக்கெட் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.