தமிழ்நாடு
அண்ணாமலை பேட்டி எதிரொலி: அமைச்சர்களின் அறையில் இருந்து உதயநிதி படம் அகற்றம்!
தமிழக அமைச்சர்களின் அலுவலகங்களில் முதல்வர்கள் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையில் உதயநிதி படம் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை அவர்கள் நேற்று அளித்த பேட்டியின் காரணமாக அதிரடியாக உதயநிதியின் படம் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
நேற்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது ’தமிழகத்தில் 3 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின், உதயநிதி மற்றும் சபரீசன் ஆகிய மூவர்தான் முதலமைச்சர்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அவர் கூறியபடியே அமைச்சர்களின் அலுவலகங்களில் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படங்களை அடுத்து உதயநிதி படமும் இருந்தது.
இந்த புகைப்படம் சமீபத்தில் வைரலான நிலையில் அண்ணாமலையின் பேட்டியும் அதனை குறிப்பிடும் வகையில் இருந்ததால் முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி படத்தை அகற்ற உத்தரவிட்டதாகவும் இதனையடுத்து அமைச்சர்களின் அறையிலிருந்த உதயநிதியின் புகைப்படம் அகற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
இளம் அமைச்சர்கள் மட்டுமின்றி சீனியர் அமைச்சர்களும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு இணையான மரியாதையை உதயநிதிக்கு கொடுத்து வருவதை அடுத்து அடுத்த முதல்வர் உதயநிதி தானோ என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது என்பதும், திமுக தொண்டர் மனதிலும் அடுத்த முதல்வர் உதயநிதி தான் என்று கூறப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் இப்போதைக்கு சர்ச்சை வேண்டாம் என்று அனைத்து அமைச்சர்களும் உதயநிதியின் புகைப்படத்தை முதல்வர்கள் படங்கள் வரிசையில் இருந்து அகற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.