உலகம்
அமெரிக்க வீராங்கனைக்கு கொரோனா: ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்குமா?
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள அமெரிக்க வீராங்கனைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா உள்பட பல நாடுகளிலிருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டோக்கியோ சென்றுள்ளனர்
இந்த நிலையில் வீரர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் உள்பட ஏற்கனவே 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கெடுபிடி அதிகமாக உள்ளது
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த வீராங்கனை ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டோக்கியாவில் ஒலிம்பிக் தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து வீரர்களுக்கும் வீரர்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.