சினிமா செய்திகள்
மீண்டும் திரையுலகில் வருவேன்: முதலமைச்சர் நிவாரண நிதி கொடுத்த பின் வடிவேலு பேட்டி!
தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் கொடுத்த நடிகர் வடிவேலு மீண்டும் திரையுலகில் முன்புபோல் பிஸியாக நடிப்பேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியாக கடந்த சில மாதங்களில் பல திரையுலக பிரபலங்கள் கொடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து ஒதுக்கப்பட்ட நடிகர் வடிவேலு இன்று முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்தார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ’முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூபாய் 5 லட்சம் வழங்கினேன் என்றும் மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் மீண்டும் முன்புபோல் பிஸியாகவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக ஆட்சி குறித்து அவர் கூறியபோது ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை முதல்வர் கட்டுப்படுத்தி உள்ளார் என்றும் உலகமே உற்று நோக்கும் வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை ஆதரித்ததால் திரையுலகிலிருந்து ஒதுக்கப்பட்ட நடிகர் வடிவேலு, பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக ஆட்சி வந்ததை அடுத்து மீண்டும் திரையுலகில் பிஸியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.