தமிழ்நாடு
திமுகவில் இணைகிறேனா? ஆனந்த்ராஜ் பேட்டி
![anandraj - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/anandraj.jpg)
நடிகர் ஆனந்தராஜ் ஏற்கனவே அதிமுகவில் இருந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறியதால் அவர் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியின்போது ’என் தலைவன் யார் என்பதை முடிவெடுக்கும் உரிமை எனக்கு உள்ளது என்றும், கண்டிப்பாக காலம் கனியும் போது என் தலைவன் யார் என்பதை முடிவு செய்து அதன் பின் உங்களுக்கு முறையாக தெரிவிப்பேன் என்று கூறினார்.
அதிமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் பலர் சேர்ந்து வருவதற்கு ஒரு காரணம் உள்ளது என்றும், அதிமுகவில் என்ன தவறு நடக்கிறது என்று எனக்கு தெரியும் என்றும் ஆனால் அதை நான் பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை என்றும் ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.
மேலும் அதிமுக தலைமையில் உள்ளவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்கு யார் பிடிக்கின்றதோ, அவர்களை தன் அருகே வைத்துக்கொண்டு மற்றவர்களை கட்சியிலிருந்து வெளியேறி விட்டார்கள் என்றும், அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது திமுகவில் சேர்ந்து நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் பலர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சேர தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அதிமுகவின் தலைமை காரணம் தான் என்று அவர் தெரிவித்தார்.
அம்மாவின் காலத்தில் அனைவரும் ஒன்றாக இருந்தோம் என்றும், இன்றைக்கு அனைவரும் பிரித்து இருக்கின்றார்கள் என்றும், அதிமுகவில் இருப்பதைவிட திமுகவில் இருப்பது நல்லது என்று பிரிந்து செல்கிறார்கள் என்றும் ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.
மேலும் மேகதாது அணை விஷயத்தில் முதல்வர் சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்து கட்சிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களும் ஆதரவாக இருப்பார்கள் என்றும் ஆனந்தராஜ் தெரிவித்தார். ஆனந்தராஜின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.