தமிழ்நாடு
Breaking | ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு…ரசிகர் மன்றம் தொடரும் என அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 38 மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் சந்தித்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு என்றும் ரசிகர் மன்றம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல
சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.
காலச் சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை, ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ் நாடு!! ஜெய்ஹிந்த்!!!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது