தமிழ்நாடு
கொங்கு நாடு ஒரு கற்பனையே: கே.எஸ்.அழகிரி
கொங்கு நாடு வாதம் ஒரு கற்பனை வாதமே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.
திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து, இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று அழைத்து வருகிறது. இப்படிச் சொல்வதால் கொதிப்படைந்துள்ள வலதுசாரிகள், ‘கொங்குநாடு’ கோஷத்தை எழுப்பி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் அழகிரி, ‘தமிழ்நாட்டைப் பிரிப்பது என்பது, தமிழ்நாட்டில் பிரிவினையை உருவாக்குவது என்பது ஒரு காலத்திலும் இயலாத காரியம். அரசியல் காரணங்களுக்காக பிரிவினை பேசப்படுகிறது. தமிழக மக்கள் ஒரு போதும் பிரிவினையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரிவினை வாதிகளுக்கு தமிழகத்தில் ஆதரவும் இல்லை. பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி தான் இது. கொங்கு நாடு என்பது ஒரு கற்பனை. அது ஒரு கற்பனைவாதம். நமக்கு அழகான நிலப்பரப்பு இருக்கிறது. அதற்குத் தமிழ்நாடு என்கிற அழகான பெயர் உள்ளது. அதுவே போதுமானது’ என்று உறுதிபட தெரிவித்து உள்ளார்.