தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கொங்குநாடு குறித்த பரிசீலனை தொடக்க நிலையில் உள்ளது: கரு. நாகராஜன்
தமிழ்நாட்டில் கொங்கு நாடு குறித்த பரிசீலனை தொடக்க நிலையில் உள்ளதாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த திமுக உள்பட ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகின்றனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக அதிரடியாக தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது இதனால் தமிழக தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் கொங்கு நாடு என்ற தனிநாடு பிரிப்பதற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் பதிவுகளில் இருந்து தெரியவருகிறது. சென்னைக்கு மட்டுமே முழுக்க முழுக்க அனைத்து சலுகைகளும் தமிழக அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கொங்குநாடு என்று கூறப்படும் பகுதியில் எந்தவித திட்டமும் செயல்படுத்தவில்லை என்றும் விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் கொங்கு நாடு என்ற ஹேஸ்டேக் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் அதற்கு எதிராகவும் ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மொத்தத்தில் ஒற்றுமையாக இருக்கும் தமிழ் நாட்டை பிரிப்பதற்கு முதல் கோடு போட்டது ஒன்றிய அரசு என்று கூறிய திமுக என்றும் அதன் பின்னர் கொங்கு நாடு என்ற கோடுபோட்ட பாஜக என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுக கைவிட்டால், கொங்குநாடு திட்டமும் கைவிடப்படும் என்று பாஜக தரப்பில் இருந்து கூறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.