தமிழ்நாடு
நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழ் வழியில் படித்தவர்கள் எண்ணிக்கை சரிவு!
![neet 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/neet-1.jpg)
நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழ் வழியில் படித்தவர்கள் எண்ணிக்கை சரிவு என்ற அதிர்ச்சியான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
மருத்துவ படிப்புகள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றும் திமுக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்கள் எப்படி நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நீட் தேர்வுக்குப் பின்பு தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது அதிகளவில் குறைந்துள்ளதாக அதிர்ச்சியான புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
2014-2015 கல்வியாண்டில் தமிழ் வழியில் படித்த 481 மாணவர்கள் மருத்து படிப்பில் சேர்ந்துள்ளனர். இதுவே 2015- 2016 கல்வியாண்டில் 456 ஆகவும், 2016-2017 கல்வியாண்டில் 436 ஆகவும், 2017-2018 கல்வியாண்டில் 41 ஆகவும், 2018-2019 கல்வியாண்டில் 88 ஆகவும், 2019-2020-ல் 58 தமிழ் வழிக் கல்வி படித்த மாணவர்களும் நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவ படிப்பில் சேர்வதிலிருந்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.