தமிழ்நாடு
ஜெயலலிதாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை ஒன்று உள்ளது. சசிகலாவின் அடுத்த ஆடியோ!
ஜெயலலிதாவுக்கு நான் செய்ய வேண்டிய முக்கிய கடமை ஒன்று உள்ளது என சசிகலா தனது அடுத்த ஆடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து விட்டு விடுதலையாகி வந்த பின் சில நாட்கள் வரை அதாவது தேர்தல் வரை அமைதியாக இருந்த சசிகலா, தற்போது தேர்தலுக்குப் பின்னர் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார். தினமும் அவர் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஆகியோர்களுடன் பேசி வரும் ஆடியோக்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சசிகலாவுடன் பேசிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு வந்தாலும் தொடர்ச்சியாக பல பிரமுகர்கள் சசிகலாவுடன் தற்போது தொடர்பில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் கோமுகி மணியன், கணபதி மற்றும் இளந்தமிழாவர்வன் ஆகியோருடன் போனில் பேசி உள்ளார். இது குறித்த ஆடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கிருந்து தொண்டர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன் என்றும், அதிமுக என்ற கட்சியை வழிநடத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்றும், நான் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கும் அம்மா ஜெயலலிதா அவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமை இது என்றும் கூறினார். மேலும் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் எல்லாவற்றின் மீறி தான் நான் முன்னேறி வந்தேன் என்றும், அனைத்து கஷ்டங்களையும் நான் பார்த்து விட்டேன் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை என்னால் மிக எளிமையாக சமாளிக்க முடியும் என்றும், ஏனென்றால் அதிமுக தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்
எனவே ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் சசிகலா ஒரு சூறாவளி பிரச்சாரத்தை செய்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது