தமிழ்நாடு
லைக், ஷேர் மட்டும் செய்தால் 50 ஆயிரம் பணம்: சென்னையில் நூதன மோசடி
![like and 3 share - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/like-and-3-share.png)
வீடியோக்களை லைக் மட்டும் ஷேர் செய்தால் மாதம் ரூபாய் 50 ஆயிரம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி சென்னையில் 3 பேர் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைனில் பணி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வருவதை பார்த்து பலர் ஏமாந்து பணம் கட்டி வருகின்றனர். முதலில் வேலை கொடுக்கும் அந்த நபர்கள் அதன் பின்னர் பணம் கொடுக்காமல் ஏமாற்றுவார்கள். அதற்கு முன்னரே அவர்கள் டெபாசிட் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் ஆயிரக்கணக்கானோர் ஏமாந்துள்ள நிலையில் தற்போது அதே போன்று மீண்டும் ஒரு ஏமாற்று வேலை நடைபெற்று உள்ளது.
செல்போனில் வீடியோவை லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும், மாதம் 50 ஆயிரம் பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த விளம்பரத்தை நம்பி பலர் செல்போன் மூலம் ரூபாய் 30,000 கட்டி வேலை செய்து உள்ளனர். ஆனால் சொன்னபடி பணம் வராததால் தாங்கள் ஏமாந்ததை உறுதி செய்த அவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
அவ்வாறு ஏமாந்தவர்களில் ஒருவரான தினேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாதவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்ததில் 3 பேர் இந்த மோசடியை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சையது பக்ருதீன், மீரா மொய்தீன், முகமது மானஸ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடியோவை லைக் செய்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை ஷேர் செய்தால் போதும் மாதம் 50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.